Thursday, February 28, 2013

லெபனான் பயணம் - பெய்ரூட் - 4



லெபனான் போவதென்று முடிவான போதே எதைப் பார்க்கிறோமோ இல்லையோ கலீல் ஜிப்ரான் பிறந்த ஊரையும் அவர் வீடு மற்றும் மியூசியத்தையும் பார்த்து விட வேண்டும் என்று ஆசை பிறந்தது. அதை நிறைவேற்றாமல் திரும்பி வந்தது ஏமாற்றம் தான் என்றாலும் இன்னொரு முறை லெபனான் செல்வதற்கான காரணம் ஒன்றையும் திருப்பிக் கையோடு கொண்டு வந்திருக்கிறோம் என்று ஆறுதல் பட்டுக் கொண்டோம். ஜிப்ரான் பிறந்த ஊரின் பெயர் Bsharri. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வடக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. ஹோட்டலின் டிராவல் டெஸ்க்கில், மலைக்கிராமம் என்பதால் அந்த ஊரையடைய 3 மணி நேரமாகும் என்றும் குளிர் 4 டிகிரிக்குக் குறைவாக இருக்குமென்றும் சொன்னார்கள். ஏற்கனவே எனக்கு சைனஸ் தொந்தரவும் சித்துவுக்கு தொடர் இருமலும் இருந்ததால் ரிஸ்க் எடுக்க பயமாக இருந்தது. ஜிப்ரானை பார்ப்பதற்கு எந்தளவிற்கு ஆசைப்பட்டோமோ அதே அளவிற்கு வாழ்நாளில் முதன் முறையாக பனி படர்ந்த சிகரங்களை நேரில் பார்க்கவும் ஆசைப்பட்டோம். இரண்டுமே இப்பயணத்தில் வாய்க்கப் போவதில்லை என்பது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. வாடியிருந்த என் முகத்தைப் பார்த்துவிட்டு  இலுப்பைப் பூ ஆப்ஷனாக ”அதற்கு பதிலாக நீங்கள் Barouk Cedars போகலாம்.. ஒரு மணி நேரம் தான் ஆகும்.. அங்கும் பனி மலைகள் இருக்கின்றன..அத்தனை குளிர் இருக்காது” என்றார்கள்.

சித்துவின் பிறந்தநாளன்று பரூக் செடார்ஸ் கிளம்பினோம். கிளம்பி 10 நிமிடத்திற்குள்ளாகவே நான் ஆர்வக் கோளாறு காரணமாக “பனி இருக்குமில்ல? ஐஸை தொடற அளவுக்கு கிட்ட போக முடியுமா..? ரொம்ம்ம்ம்ப குளிருமோ? பாப்பாக்கு கைக்கு க்ளவுஸ் வாங்காம வந்துட்டமே? என்னோட க்ளவுஸை போட்டு விட்டுரட்டுமா?  உங்களுக்கு இருமல் ஜாஸ்தியாய்ட்டா என்ன செய்யறது? மறக்காம குல்லா போட்டுக்கோங்க.. ஐய்யோ ரெண்டு பேரும் சாக்ஸ் எடுக்காம வந்துட்டமே.. எப்டி பனில கால் வைக்கறது?” என்றெல்லாம் பினாத்திக் கொண்டே வந்தேன். என் தொணதொணப்பு தாங்காமல் சித்து “அங்க பனி இருக்குமில்லையா?” என்று டிரைவரிடம் விசாரித்தார். அந்த இளைஞன் ரொம்பவும் சிரத்தையாக “பனி இருக்காது.. விண்டர் முடிஞ்சி ஸ்ப்ரிங் வந்துடுச்சே?” என்றான். நான் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் வாயடைத்து அடுத்த நிமிடம் சித்துவை முறைத்து, அதற்கடுத்த நிமிடம்  “பனியில்லாம அங்க போய் என்ன பண்றதாம்?” என்று தொடங்கி அடுத்த பினாத்தலை ஆரம்பித்தேன். நான் புலம்பிய புலம்பலில் அவனுக்கே தமிழ் புரிந்ததோ என்னவோ யார் யாருக்கோ அலைபேசி “அங்கே பனி இருக்கிறதா” என்று விசாரித்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து “பனி இருக்கிறதாம்” என்று அவன் சொன்ன பிறகே என் நெற்றிச் சுருக்கம் சீரானது. :)



பாதி மலை ஏறும் போது பனி படர்ந்த சிகரங்கள் தென்படத் துவங்கின. “அதோ.. ஸ்நோ இருக்குப்பா.. ஹைய்யோ எவ்ளோ அழகா இருக்கு..” என்று ஆரம்பித்த வேகத்திலேயே “அவ்வ்வ்வ்வ்வ்ளோ தூரத்துல இருக்கே? அங்க எப்டி நாம போக முடியும்? கீழ நின்னு இதான் பனி மலைன்னு காட்டப் போறான் போலிருக்கு” என்று திரும்பவும் சுருதி குறைந்து விட்டது.  அத்தனை உயரம் ஏறவே முடியாதென்று சர்வ நிச்சயமாய் நான் நம்பிக் கொண்டிருக்கையில் திடீரென்று பாதையின் ஒரு ஓரம் முழுவதிலும் மலையின் பக்கவாட்டுப் பகுதிகளில் பனி கொட்டிக் கிடந்தது!  குழந்தை தூங்கிக் கொண்டிருந்தாள்.. “கண்ணு இங்க பாருடா.. எவ்ளோ ஐஸ் பாரு..” எனது உற்சாகக் கூச்சலில் கண் விழித்தவள் நொடியில் பந்து போல துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டாள். எங்கள் மூவரைத் தவிர்த்து வேற்று மனிதன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பே வரவில்லை.. கீழே இறங்கி நானும் அம்முவும் குதித்துக் குதித்து பனியை அள்ளி வீசி  ஆனந்தமாக விளையாடினோம். பதிவில் எழுதியது போலவே பனியில் கால் புதைய நின்று கைகளிரண்டையும் அகல விரித்து “சித்தூஊஊஊ நான் உன்னைக் காதலிக்கிறேஏஏஏன்” என்று உரக்கக் கத்தி காலடியில் பனி உருகியதில் சறுக்கிக் கீழே விழ இருந்தேன்.. :))))))  எத்தனை விளையாடியும் அம்முவிற்கு சலிக்கவேயில்லை.. கிளம்பும் போது வர மாட்டேனென்று கை கால்களை உதைத்துக் கொண்டு கத்தியவளை குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு வந்தோம். 



அங்கிருந்து மேலும் 15 நிமிடங்கள் கார் மேலே ஏறியது.. இன்னும் மேலே.. இன்னும் மேலே என்று வானத்தையே தொட்டு விடுவோமோ என்றிருந்தது. இத்தனை உயரத்திற்குப் பாதை இருக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. அதற்கு மேலும் கூட பாதையும் பனியில் காலடித் தடங்களும் இருந்தன. நாங்கள் கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 6000 அடி உயரத்திலிருந்தோம். மீண்டும் கார் நின்ற இடத்தில் செடார் மரங்கள் அடங்கிய வனம் ஒன்று இருந்தது.  செடார் மரம் லெபனானின் தேசியச் சின்னம்.. அவர்களின் தேசியக் கொடியிலும் இதுவே இடம் பெற்றிருக்கிறது. 130 அடி உயரம் 8 அடி அகலம் வரையிலும் வளரக் கூடிய ஊசியிலைத் தாவரம். 600 வருட பழமையான செடார் மரங்களை இங்கே பாதுகாத்து வருகின்றனர். குளிரும்  வெயிலும் இதமாய்ப்  பரவி சூழலை சொர்க்கமாக்கிக் கொண்டிருந்தன. 






 மலை உச்சியிலிருந்து கீழே பள்ளத்தாக்கைப் பார்க்கும் போதும் நிமிர்ந்து இன்னமும் எட்டாத் தொலைவிலிருக்கும் ஆகாயத்தைப் பார்க்கும் போதும் அடிவயிற்றிலிருந்து எழும்பிய வெப்ப உணர்வை எப்படி மொழிபெயர்ப்பதென்று தெரியவில்லை ”மலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று”   - என்ற ஜெமோவின்  வாசகம் நினைவிற்கு வந்தது. இத்தனை நாட்களாய் அந்த “நான் நான்” ல் சிறுமையை  மட்டுமே உணர்ந்திருக்கிறேன்.   மலைத்தொடருக்கு முன்னால் நிற்காமல் அதன் உச்சியில் நின்று இதே வாசகத்தை முணுமுணுத்தால் அந்த “நான் நான்” ல் சிறுமைக்கு பதிலாய் கர்வம் ஒலிக்கிறது. ”தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை சங்கரா யார்கொலோ சதுரர்?” என்ற மணிவாசகரின் கர்வம். :)

”என் 34 வது வயதில் முதன் முறையாகப் பனி மலையைப் பார்க்கிறேன்” என்றார் சித்து. கேக்கை இங்கே கொண்டு வந்து வெட்டியிருக்கலாமே என்று சின்னதாய் ஒரு ஆதங்கம் எழுந்தது. இல்லாவிட்டாலும் கூட  சித்து இதுவரை சந்தித்திராத அதியற்புதமான பிறந்தநாளாகவே அந்நாள் அமைந்தது. வீட்டிற்கு வந்ததிலிருந்து அம்மு ஃப்ரீசரில் பனிக்கட்டிகள் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அறை முழுக்க கொட்டி வைத்து விளையாடப் போகிறாளாம். :)

No comments: